உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது! பிரதமரை விமர்சித்த முத்தரசன்! ஆளுநர் மீது கடும் அட்டாக்
சென்னை : பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது. மொழியைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை எனவும், ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் காசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது என பாஜக கூறி வருகிறது.
இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தோடு தொடர்புடையது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக கூட்டணிக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

முத்தரசன்
இந்நிலையில், ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," தொழிலாளர்களுக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்று வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் வினோத சட்டங்கள் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது அமல்படுத்தவும் கூடாது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

பிரதமர் மோடி
ஒரு மாத காலம் நடைபெறும் வாரணாசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. உலகின் மூத்த மொழி தமிழ் என புகழும் பிரதமர் தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவர்களில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது. மொழியைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை. பாரதிய ஜனதா கட்சி இந்தியாவைத் தான் தான் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளைப் போல் பாஜகவினர் விலை கொடுத்து வாங்குகிறார்கள்

திரும்பப் பெற வேண்டும்
தமிழக ஆளுநரின் பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. ஆளுநரின் கருத்துக்கள் மத ரீதியிலாக அமைந்துள்ளது. இதனை வைத்து அவரை நீக்கம் செய்திருக்க வேண்டும். மாநில மக்களின் நலன் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மோடி அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

அரசியல் கட்சி
ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறார். ஆறு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் தனது மரியாதையை இழந்துள்ளார். ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications