அன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 2016 ஆம் ஆண்டு ரயில்நிலையத்தில் சுவாதி என்ற பெண் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கே இன்னமும் விடைக் கிடைக்காத நிலையில் தற்போது தாம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சுவாதி. இவர் தினந்தோறும் நுங்கம்பாக்கத்தில் ரயில் ஏறி பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு தந்தையுடன் ரயில் நிலையத்திற்கு வந்த சுவாதியை, தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த பெண்ணின் வாயில் ஒரு இளைஞர் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவாதி மரணமடைந்தார்.

விசாரணை
இந்த கொலை குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து ரயில் நிலையம் அருகில் உள்ள இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சுவாதியை வெட்டியவுடன் அவசர அவசரமாக தப்பிசெல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

செங்கோட்டை மீனாட்சிபுரம்
இதை வைத்து செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் எனும் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் போலீஸார் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுவாதி
ராம்குமார், சுவாதியை ஒரு தலைபட்சமாக காதலித்ததாகவும் அவர் இவரது காதலை ஏற்க மறுத்ததாகவும் தினமும் சுவாதியை பார்க்க அவர் இருக்கும் சூளைமேட்டில் தங்கியிருந்ததாகவும் தினமும் சுவாதி செல்லும் கோயிலுக்கு ராம்குமாரும் சென்றதாகவும் பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் திடீரென மின்கம்பியை வாயில் கடித்துக் கொண்டு இறந்துவிட்டதாக சிறைத் துறையினர் அறிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசி வரை சுவாதி ஏன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

தாம்பரம் ரயில்வே குடியிருப்பு
தற்போது இது போன்றதொரு சம்பவம் மீண்டும் தாம்பரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளது. ஸ்வேதா (22) என்ற கல்லூரி மாணவி ரயில் நிலையத்தின் உள்ளே செல்லும் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த போலீஸார் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த மாணவி குரோம்பேட்டையை சேர்ந்தவராம். அந்த இளைஞர் திருக்குவளையைச் சேர்ந்த ராமசந்திரன் என தெரியவந்துள்ளது.

உண்மை என்ன
விசாரணையில் இருவரும் காதலர்கள் என்றும் இந்த இளைஞரின் செயல்கள் பிடிக்காமல் ஸ்வேதா ஒதுங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஸ்வேதா மீது அந்த இளைஞருக்கு ஒரு தலைக் காதலும் இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் கிட்டதட்ட சுவாதியின் கொலை போன்றே இருக்கிறது. இந்த சம்பவத்திலாவது உண்மை வெளிக் கொண்டு வரப்படுமா என தெரியவில்லை.

காதலன்
காதலனின் செயல்பாடுகள் பிடிக்காவிட்டாலோ வீட்டில் எதிர்ப்பு கிளம்பினாலோ அவரிடம் இருந்து ஒதுங்கும் பெண்களை "எங்கிருந்தாலும் வாழ்க" என வாழ்த்தும் ஆண்களை விட ஆசிட் வீச்சு, கொலை, ஆபாச படம் எடுத்து மிரட்டல், திருமண மண்டபத்தில் கலாட்டா, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களே அதிகம் இடம்பெறுகின்றன. இது போன்ற குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். காதலுக்கு பச்சைக் கொடி காட்ட பெண்ணுக்கு உரிமை உள்ளது போல் வேண்டாம் என சிவப்புக் கொடி காட்டவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை உணர வேண்டும். பெண்களும் ஒருவரை காதலிப்பதற்கு முன்னர் காதலுக்கு கண்ணில்லை என்பதை போல் எதற்கும் அவசரப்படாமல், அந்த நபர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராய்ந்து தனது குடும்பத்தில் எதிர்ப்பை சமாளித்து காதலில் வெல்ல முடியுமா இல்லை அவர்களது சம்மதத்தை பெற்று திருமணம் செய்வது சாத்தியமா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பின்னர் முடிவெடுத்தால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள், உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications