கருணை அடிப்படையில் வழங்கும் பணியை உரிமையாக கோர முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி
கருணை அடிப்படையில் வழங்கும் பணியை தகுதியின் அடிப்படையாக கொண்டு அளிக்க வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கருணை அடிப்படையில் பணி வழங்குவது நடைமுறையில் உள்ளது. அதாவது, அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறக்க நேரிட்டால் அவரது மனைவி அல்லது வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். அந்தக் குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த நடைமுறையை அரசாங்கங்கள் பின்பற்றி
வருகிறது. இவ்வாறு கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் பணியில் சிலர் சேராமல், தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையாக கொண்டு பணி வழங்கவேண்டும் என வலியுறுத்துவர். அவ்வாறு கிடைக்காவிட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவர். இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றே நீதிமன்றங்கள் உத்தரவிடும்.
இந்நிலையில், கருணை அடிப்படையில் பணி தொடர்பாக பெண் மனுதாரர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "அரசுப் பணியில் இருந்த எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்த சமயத்தில், பணியில் சேருவதற்கான வயது வரம்பு எனக்கு பூர்த்தியாகவில்லை. எனவே வயது வரம்பு பூர்த்தியாகி 3 ஆண்டுகள் கழித்து நான் அந்தப் பணிக்கு விண்ணிப்பித்தேன். ஆனால், எனது தந்தை இறந்ததில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே எனக்கு கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய பணியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் வாத, பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள், பணியில் இருந்தவர்கள் இறந்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு பூர்த்தியான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. மேற்கண்ட மனுதாரர் தனது வயது வரம்பு
பூர்த்தியான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்திருக்கிறார். இதனை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கருணை அடிப்படையிலான பணியை தகுதியின் அடிப்படையில் வழங்கக் கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அது உரிமையும் கிடையாது. கருணை அடிப்படை பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளதாரத் தீர்வுக்காக மட்டுமே.
இதை வெகுகாலம் காத்திருப்பில் வைக்கக் கூடாது. இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.