தம்பியால் சர்ச்சை! தர்மசங்கடத்தில் ஓ.பி.எஸ்.! வீடு ரூபத்தில் பெரியகுளம் வில்லங்கம்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி தம்பி மீது மருத்துவர்கள் தம்பதி அளித்துள்ள புகார் தான் இப்போது அவருக்கு தலைவலியை கொடுத்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது தம்பி ஓ.ராஜா ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மீண்டுள்ள நிலையில், நான்காவது தம்பியான ஓ.சண்முகசுந்தரமும் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
எனக்கா கடன் தரலை.. வங்கியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!
வயதான மருத்துவர்கள் தம்பதியை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்.தம்பிகள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மொத்தம் 4 தம்பிகள். அதில், முதல் தம்பியான ஓ.சுசிந்தரனும், மூன்றாவது தம்பியான ஓ.பாலமுருகனும் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்கள். எஞ்சியிருப்பது இரண்டாவது தம்பியான ஓ.ராஜாவும் கடைசி தம்பியான ஓ.சண்முகசுந்தரமும் தான். இதில் ஓ.ராஜாவை தவிர ஓ.பி.எஸ்.ஸின் மற்ற தம்பிகளை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அவர்கள் விவசாயம், தொழில் என அதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.
வீடு வில்லங்கம்
இந்நிலையில் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த திருமலை-விமலா என்ற மருத்துவர்கள் தம்பதி, ஓ.பி.எஸ்.ஸின் கடைசி தம்பியான ஓ.சண்முகசுந்தரம் மீது அளித்துள்ள புகார் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் குடியிருந்து வரும் வீட்டை விலைக்கு கேட்டு அதை கொடுக்காததால், அத்துமீறல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
பேசி முடிக்கவும்
ஆவின் சேர்மன், பூசாரி கொலை வழக்கு என அடுக்கடுக்கான சர்ச்சையில் சிக்கி இப்போது தான் இரண்டாவது தம்பி ஓ.ராஜா பிரச்சனைகளில் இருந்து மீண்டுள்ள சூழலில், அதற்குள் அடுத்த தம்பி சர்ச்சையில் சிக்கியிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் அமர்ந்து பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருமாறு ஓ.பி.எஸ்.தரப்பில் தம்பிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஆட்சி மாற்றம்
இந்த வீடு வில்லங்கம் இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை என்றும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்தே இந்தப் பிரச்சனை இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இப்போது ஆட்சி மாறி காட்சிகள் மாறியுள்ளதால், ஓராண்டுக்கும் மேலாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்.