“நீங்கள் ஏந்திய செந் தீ சுடர்விட்டு எரியும்”.. செங்கொடி போராளி நல்லகண்ணுவுக்கு உருக்கமான கவிதை!
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தமது 101வது வயதில் நேற்று காலமானார். வாழ்நாளெல்லாம் தூய்மையான மக்கள் நல அரசியலின் முன்னுதாரணமாக, இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தலைவராக வாழ்ந்து மறைந்தவர் நல்லகண்ணு.
தோழர் நல்லகண்ணுவின் மறைவு தமிழக மக்களுக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை. நல்லகண்ணுவின் மறைவையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸில் ஆஸ்டின் நகரில் வசிக்கும் நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் மாணிக்கம் விஜயபானு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:

செங்கொடி போராளி ( 1924 - 2026 )
பசிக்குச் சோறும்
படுக்க அரையடி
இடமும் தவிர்த்து
மனித உரிமை
குரல் நெரித்த போது
பண்ணையடிமை
அதிகார ஒழிப்பு சட்டம்
போராடி
மக்கள் அடிநெஞ்சில்
செங்கொடி தாங்கி
ஓங்கி நின்றவர்
கொடுஞ்சிறை
அடித்துப் புரட்டிய போதும்
வருடத்தின் நாட்காட்டி
எப்போதும்
வலித்து கடந்த
நாட்களாய் நகர்ந்தாலும்
நெஞ்சுரம் மட்டும்
தளர்ந்து
எப்போதும் நின்றதில்லை
வாழ்வில் போராட்டம்
என்பதை
போராட்டமே வாழ்க்கையென
கடைசி வரை
அன்போடு
அரவணைத்தவர்
எண்ணிச் சொல்ல
ஒன்றா இரண்டா
தோழரே உங்கள்
பயணம்
ஆங்கிலேய எதிர்ப்பு
உளுத்த சோள எதிர்ப்புத் தினம்
விவசாய உரிமை
நில உச்சவரம்பு மசோதா
நிலமீட்பு
சாதி ஒழிப்பு
எண்ணித் தீராது
இந்த சுவடுகள்
எளிமை என்ற சொல்லை
அதைவிட
எளிமையாக வாழ்ந்து
காட்டியவர்
குடும்பம் உறவு
கடந்து
என் நாடு என் மக்கள்
உறவை
கடைசிவரை
காதலித்தவர்
அரசு கௌரவமும்
கட்சிக் கொடையும்
சுற்றம் நட்பு
பகிர்ந்த நிதியும்
மக்களுக்கே அர்ப்பணித்து
அமைதியாய் புன்னகைத்து
கடந்தவர்
தேர்வு செய்த
கொள்கை மட்டுமே
இடதுசாரி
அதில் தோழர்
பதித்த பாதச்சுவடு
எப்போதும்
இடது வலது இன்றி
அடித்தட்டு
மக்கள் உரிமை
கேட்கும்
நேர்கோட்டு பாதை
உழைப்பும் உரிமையும்
மறுத்து
போராட்டமும் நீதியும்
வெல்லும்
ஒவ்வொரு நிகழ்விலும்
நீங்கள் ஏந்திய
செந் தீ
உங்கள் பெயர் சொல்லி
சுடர்விட்டு
அணையாது எரியும்
எப்போதும்
செய்த தொண்டிற்கும்
காட்டிய எளிமைக்கும்
அதிகார வர்க்கத்தை
கடைசி வரை
எதிர்த்த
நெஞ்சுரத்திற்கும்
பாதம் தொட்ட
என்
செங்கொடி வணக்கங்கள்!
ஓய்வெடுங்கள் தோழரே.
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின், டெக்சாஸ்.












Click it and Unblock the Notifications