நீலிக்கண்ணீர் வடிக்கும் அதிமுக, பாஜக.. வட மாநில தொழிலாளர்களுக்கு என்ன செஞ்சீங்க?- காங்கிரஸ் அட்டாக்!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜகவும், அதிமுகவும் நீலிக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
சென்னை : நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜக தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவிய செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.
தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்களின் அச்சத்தைக் களையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் உடனே தொடர்பு கொள்ளும்படி ஹெல்ப் லைன் நம்பரை அறிவித்து கட்டுப்பாட்டு மையங்களையும் அமைத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜக மாநிலத் அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை, திமுக வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர் எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம், இனம் தொடர்பாக கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலிக்கண்ணீர்
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது அப்போது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக வாய் மூடி மெளனியாக இருந்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்? திடீரென இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக தங்கள் வீடு செல்ல பயணச்சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முன்வந்த முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். அதை அறிவித்ததும் நான் தான்.

கால்நடையாகவே
அதைப்போலவே சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலம் செல்வதற்கு பேருந்து கட்டணம் ரயில் கட்டணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அறிவித்தார்கள், அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்கள். இந்த விவகாரத்தில் எங்கே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என்று அஞ்சி அந்த நிதி உதவியை அப்போது ஏற்க மறுத்தவர்கள் தான் இந்த மத்திய பாஜக அரசும் மாநில அரசு அதிமுக ஆகும். தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்ற பல வட மாநில தொழிலாளர்கள் போகிற வழியிலேயே பசியாலும் பட்டினியாலும் இறந்து போனார்கள்.

பாஜக தான்
அப்போது கூட பாஜகவும் மோடியும் எந்தவிதமான கரிசனமும் காட்டாமல் கல்நெஞ்சக்காரர்களாக இருந்து வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் இன்று திடீரென வட மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல பேசுகிறார்கள். இவர்களுடைய போலி வேடம் தமிழக மக்களிடையே எடுபடாது. தோல்வியடையும். இங்கே நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்" என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications