ஒரு பில்லை காட்ட.. எதுக்கு ஏப்ரல் மாதம்? அண்ணாமலையை பார்த்து.. ஆனந்த் சீனிவாசன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பல லட்சம் மதிப்பு கொண்ட ரபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் நிர்வாகியும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல மேடைகளில் குறிப்பிடும் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.
இந்த வாட்ச் வாங்கிய பில் எங்கே என்று திமுகவினர் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையோ பில்லை ஏப்ரல் மாதம் கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகியும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் தற்போது அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் , இப்போ ஒரு வேடிக்கையான வீடியோ பார்த்தேன். அண்ணாமலை ரபேல் வாட்சை பற்றி பேசி இருக்கிறார். நாங்க கேட்பது சின்ன விஷயம். நீங்கள் காசு கொடுத்து வாங்கி இருந்தீர்கள் என்றால் பில்லை காட்டுங்கள். சுங்க வரி கட்டி இருக்கிறீர்களா? இறக்குமதி வரி கட்டி இருக்கிறீர்களா? அதை காட்டுங்கள். ஜிஎஸ்டி கட்டி இருக்கிறீர்களா? எந்த ஊரில்.. எங்கே வாங்கினீர்கள்? இதை சொல்ல முடியாதா?

அண்ணாமலை
உங்களிடம் பில் மிஸ் ஆகிவிட்டது என்றால் நீங்கள் வாங்கிய நிறுவனத்திடம் கேட்கலாம். 500 வாட்ச் தானே விற்றார்கள். பில்லை கேட்டால் கொடுக்க போகிறார்கள். அதைவிட்டுவிட்டு நீங்கள் தேசியவாதியா.. தேச விரோதியா என்று நாங்கள் கேட்கவில்லை. நீங்கள் வாட்சை எப்படி வாங்கினீர்கள்? 4 லட்சம் வாட்ச் கட்டும் அளவிற்கு வருமானம் ஏது? உங்களிடம் பில் இல்லை என்றால் உங்களுக்கு வாட்சை இலவசமாக கொடுத்தது யார்?

ஏப்ரல் ஏன்?
இது என்ன ஏப்ரல் மாதத்தில் பில்லை காட்டுவேன் என்று கூறுவது. இப்போ வாட்சை கட்டி இருக்கிறீர்கள்.. இப்போது தானே பில் கொடுக்க வேண்டும். ஏப்ரல் மாதம் கொடுப்பேன்.. மே மாதம் கொடுப்பேன் என்று குடுகுடு பாண்டி போல பேசுவது ஏன்? சீனாவிற்கு பதிலடி கொடுப்போம்.. அது செய்வோம்.. இது செய்வோம் என்கிறீர்கள்.. ஆனால் உங்கள் தலைவர் சி என்ற வார்த்தையை சொல்லவே பயப்படுகிறார். சீனா என்ற வார்த்தையை சொல்லவே அஞ்சுகிறார்.

சீனா
அந்த வார்த்தையையே அவரால் சொல்ல முடியவில்லை. கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்போது சீன ராணுவம் இந்தியா உள்ளேயே வரவில்லை என்று தானே நீங்கள் சொன்னீர்கள்? அப்போது நீங்கள் சீனாவை எதிர்த்து பேசினீர்களா? அப்போது பேசாமல் இப்போது வாட்ச் விவகாரத்தில் தேசபக்தியை இழுப்பது என்ன பேச்சு. சும்மா உப்பு இருக்கிறது.. புளி இருக்கிறது என்றெல்லாம் பேசாதீர்கள்.. பில் இருக்கிறதா?, என்று ஆனந்த் சீனிவாசன் கேட்டுள்ளார்.

அண்ணாமலை விளக்கம்
முன்னதாக இதற்கு அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரப்பில் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications