செம போட்டி.. சம பலம்.. குமரியின் கடைக்கண் பார்வையை அள்ள போவது ராதாவா, குமாரா?!
Recommended Video

சென்னை: "சும்மா சொல்லக்கூடாது.. தொகுதிக்கு நிறையவே செஞ்சிருக்கார் வசந்தகுமார்" என்று கன்னியாகுமரி தொகுதி மக்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்!
கன்னியாகுமரியை பொறுத்தவரை அது ஒரு சுற்றுலா ஸ்தலம். தமிழகத்தின் கடைகோடையில் இருந்தாலும், இந்த மாநிலத்துக்கே ஒரே ஒரு இணை அமைச்சரை பெற்று தந்தது இந்த கன்னியாகுமரிதான்!
அதனால்தான் இதே தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிடுபவர் வசந்தகுமார்!

நாடார் சமூகம்
தொகுதியை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் குறிப்பாக ஆர்.சி. கிறிஸ்தவ மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால் வேட்பாளர்கள் இருவருமே இந்துக்கள்.. இருவருமே நாடார்கள்.. எனினும் தொகுதியின் ஒரு சில பகுதிகளில் நாடார்கள் கணிசமாக உள்ளனர். ஒருவர் இணை அமைச்சர் என்றால் மற்றொருவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர். இருவருக்குமே அறிமுகம் தேவையில்லை. இருவருமே இந்த தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான்!

சிட்டிங் எம்பி
இதில், வசந்தகுமார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தபோதே, பொன்.ராதாகிருஷ்ணன்தான் எதிர் வேட்பாளர் என்று ஓரளவு முடிவானதாம். இதற்கு காரணம், வசந்தகுமாருக்கு இணையானவர், செல்வாக்கானவர், பலமானவர் இவர்தான் என்பதுதான். இதுபோக சிட்டிங் எம்பியும்கூட!

பசை உள்ளவர்
ஆனால் வசந்தகுமாருக்கு சீட் தர காரணம், மிகப்பெரிய தொழிலதிபர். பண பலத்தை அப்படியே தொகுதிக்குள் இறக்குவார் என்பது கூட்டணி கட்சிகளின் நம்பிக்கை. இதுபோக இந்த தொகுதியில் இவர் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு வைக்க காரணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களை சொந்த காசிலேயே தூர்வாரி இருக்கிறார்.

தூர் வாரினார்
இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்களை வெட்டி சுத்தப்படுத்தியதே இவர்தானாம். இதற்காகவே ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கி உள்ளாராம்! ஒரு எம்எல்ஏவாக இருந்து கொண்டே இவ்வளவு நன்மைகளையும் செய்பவர், எம்பி ஆனால் நிச்சயம் தொகுதிக்கு நிறைய வசதிகளை செய்து தருவார் என்று நம்பப்படுகிறது.

குளச்சல் துறைமுகம்
இதற்கு மாறாக பொன்.ராதா மீது துறைமுகம் திட்டத்தில் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. இதுவும் வசந்தகுமாருக்கு சாதமாகவே உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி மீதான மக்களின் கோபமும் வசந்தகுமாருக்கு ஆதரவாகவே திரும்பக்கூடும் என தெரிகிறது.

கள நிலவரம்
அதனால் வசந்தகுமார் தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது இன்றைய கள நிலவரம்தான். இதையெல்லாம் பொன்.ராதா எப்படி எதிர்கொள்வார், தொகுதி மக்களின் ஓட்டுக்களை தனக்கு சாதகமாக எப்படி மாற்றுவார் என்பது இனிதான் தெரியும்.
ஆனால் எப்படி பார்த்தாலும், இருவரின் வெற்றி தோல்வியை கடைசியில் நிர்ணயிக்க போவது தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்களும் மீனவ மக்களும்தான்!












Click it and Unblock the Notifications