காங்கிரஸில் 35 ஆண்டு கால உழைப்பு வீண்... பாஜகவில் இணைந்த சரவணக்குமார் சரமாரி குற்றச்சாட்டு..!
சென்னை: காங்கிரஸ் தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கிய பிரமுகராக திகழ்ந்த சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உரிய அங்கீகாரம் தருவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
இதனிடையே திட்டக்குடி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் என்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திட்டக்குடியில் பாஜக சார்பில் களமிறங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

மாணவர் காங்கிரஸ்
மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், என காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சரவணக்குமார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ஓரளவு மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றவர். இப்போது கிருஷ்ணகிரி எம்.பி.யாக உள்ள டாக்டர் செல்லக்குமார் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் அவரை வைத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கூட்டம் நடத்தியவர்.

திட்டக்குடி தொகுதி
இப்படி 35 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த சரவணக்குமார் கடந்த வாரம் அதிரடியாக பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். திட்டக்குடி தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு தாம் பொறுப்பு என்ற உறுதியையும் அக்கட்சியின் தலைமைக்கு அளித்திருக்கிறார்.

ஏன் மாறினேன்?
இதனிடையே கட்சி மாறியதற்கான காரணம் குறித்து கூறியுள்ள சரவணக்குமார், '' காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல்மிக்க தலைவர்கள் இல்லை. காங்கிரஸில் இருப்பது எல்லாமே கோஷ்டி தான். தமிழகத்திலேயே 10 கோஷ்டிகள் உள்ளன. இப்படியிருந்தால் கட்சி எப்படி வளர்ச்சி அடையும். தொண்டர்கள் எப்படி நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். எனது 35 ஆண்டு கால உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் கே.எஸ்.அழகிரி நடந்துகொண்டார்.''

லட்சக்கணக்கில்
''கட்சிக்காக எனது சொந்த நிதியிலிருந்து லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறேன். டைனமிக் லீடர் இல்லாத இடத்தில் இனியும் இருந்து பயனில்லை என்பதால் பாஜகவில் இணைந்தேன்'' எனத் தெரிவித்தார். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சரவணக்குமாரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications