காங்கிரஸுக்கு அடித்த லக்.. கும்பகோணத்தில் மேயர்.. சென்னை "சொதப்பலுக்கு" இடையே திமுக தலைமை தாராளம்
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது. நாளை மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மேயர், துணை மேயர் , நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகள் கேட்டு வாங்க முடிவு செய்திருந்தன.
அதன்படி மேயர் பதவிகளையும் கூட்டணி கட்சிகள் கேட்டதால் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் திமுகவே வைத்து கொள்ளும் என தகவல்கள் வெளியாகின. இருந்தாலும் இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

கூட்டணி கட்சி
அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன பதவிகள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து திமுக பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவியை வழங்கியுள்ளது. அது போல் சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளும் காங்கிரஸுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை பதவிகள்
தேவக்கோட்டை, தேனி, காங்கேயம், சுரண்டை, கருமத்தம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகியவற்றின் நகராட்சி தலைவர் பதவிகளும் கூடலூர், ஆரணி, நரசிங்கபுரம், காரமடை, குடியாத்தம், திருவேற்காடு, குன்றத்தூர், தாராபுரம், உசிலம்பட்டி ஆகியவற்றின் துணை தலைவர் பதவிகளும் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.

பேரூராட்சிகளில் காங்கிரஸுக்கு எத்தனை
பேரூராட்சிகளை பொருத்தமட்டில் மங்களம்பேட்டை, சின்னசேலம், வடுகப்பட்டி, பூலாம்பட்டி, பிக்கட்டி, பேரையூர், பட்டிவீரன்பட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளும் சங்கராபுரம், ஜகதால , கீழ்குந்தா, மூலைக்கரைப்பட்டி, நங்கவல்லி, கருப்பூர், டி.என்.பாளையம், நாட்றாம்பள்ளி, உடையார்பாளையம், கணியூர் ஆகிய பேரூராட்சிகளின் துணைத் தலைவர் பதவிகளையும் காங்கிரஸ் பெறுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள்
கூட்டணி கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட மேயர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸுக்கு கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவி ஒதுக்கப்பட்டது பெரும் அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.

15 வார்டுகளில் வெற்றி
ஏனெனில் நகர்ப்புற தேர்தலில் சென்னையில் திமுக வலுவாக உள்ள தொகுதிகளை எல்லாம் கேட்டு காங்கிரஸ் பெற்றது. ஆனால் வெறும் 15 வார்டுகளில் மட்டுமே வென்றது. இந்த சென்னையில் பாஜக காலூன்றவே கூடாது என திமுக விரும்பியது. ஆனால் 134 ஆவது வார்டில் பாஜகவின் உமா ஆனந்தன் வென்றார்.

காங்கிரஸ் தோல்வி
இவர் கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தாலும் அவர் வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சுசிலா தோல்வியை தழுவினார். இந்த வார்டில் திமுக போட்டியிருந்தால் வென்றிருக்கும். ஆனால் கேட்டு பெற்றும் தான் வெற்றி பெறாமல் பாஜக வெற்றி பெறவிட்டுவிட்டதாக காங்கிரஸ் மீது திமுகவுக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பு
இதையெல்லாம் மறந்து மற்ற கட்சிகளுக்கு கொடுக்காத ஒரு வாய்ப்பை காங்கிரஸுக்கு திமுக கொடுத்திருக்கிறது என்றால் அந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தென் பகுதிகளில் மட்டுமே பாஜக வளர்ந்து வந்த நிலையில் தற்போது தலைநகர் சென்னையிலும் பாஜக வந்துவிட்டது. எனவே பாஜகவை வீழ்த்தும் அளவுக்கு போட்டி போட காங்கிரஸ் கட்சி பலம் பெற வேண்டும்.

கோஷ்டி பூசல்
காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்ற நிலை இருப்பதால் தமிழக காங்கிரஸ் அதை முதலில் சரி செய்ய வேண்டும். பின்னர் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். கொடுத்த பதவியை சிறப்புற செய்ய வேண்டும். மக்களவையில் தமிழகம் குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு, அவர் சென்னை வந்து சென்ற தாக்கம் இதையெல்லாம் கெட்டியாக தக்க வைத்துக் கொண்டு காங்கிரஸ் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Recommended Video

தனியொருவனாக உருவெடுக்குமா காங்கிரஸ்
எல்லாவற்றையும் விட பாஜக தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களில் வென்றுள்ளது. அது போன்றதொரு கட்டமைப்பை காங்கிரஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கோஷ்டி பூசலால் இவர்களுக்குள்ளாகவே சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டு பாஜகவுக்கு போட்டியாக தக்க பதிலடி தரும்விதத்தில் வளர வேண்டும். கூட்டணி இல்லாமலும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நிலையை காங்கிரஸ் அடைந்தால் மட்டுமே அக்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எதிர்காலம் இருக்கும். எனவே அதிருப்திக்கு மத்தியில் திமுக கொடுத்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு தன்னை வலுப்படுத்திக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications