"அதிமுகவில் நிலவும் குழப்பம்.. காரணமே பாஜக தான்.." பாயிண்ட் பாயிண்டாக சொல்லி விளக்கும் கேஎஸ் அழகிரி
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.. அதிமுக குழப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இதில் போட்டியிடுகிறது.
அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அங்கு ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

அதிமுக
அதேநேரம் அதிமுகவில் இன்னும் குழப்பமான சூழலே நீடித்து வருகிறது. அக்கட்சியில் இருந்து யார் போட்டியிட உள்ளார் என்பதில் இன்னும் குழப்பம் தீரவில்லை. அதிமுக இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடைப்பது அனைவருக்கும் தெரியும். இந்தத் தேர்தலில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என்று இரு தரப்பும் வேட்பாளரை அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், விரைவில் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎஸ் அழகிரி
இதற்கிடையே அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமணம் விழாவில் கலந்து கொள்ள கும்பகோணம் சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த கேஎஸ் அழகிரி, "இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிகப் பெரியளவில் வெல்வார்.

பாஜக
திமுக கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகச் செய்து வருகிறோம். எங்கள் கூட்டணியில் இதுவரை எந்தவொரு குழப்பமும் இல்லை... எதிர் அணியில் தான் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு காரணமே பாஜக தான்... தங்களுடன் இருப்பவர்களையே பழிவாங்குவது தான் பாஜகவின் நிலைப்பாடு... மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. பாஜகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்த சிவசேனாவை உடைத்தார்கள்.. உடைத்த அணியில் இருந்தே ஒருவரை முதல்வராக்கினார்கள்.

பாஜகவே காரணம்
கோவாவிலும் என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்கள். கோவாவில் சட்டசபை உறுப்பினர்களையே விலை கொடுத்து வாங்கினார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் அதேபோன்ற ஒரு முயற்சியை எடுத்துள்ளனர்.. பாஜகவால் தான் அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்தது.. இப்போது எந்த அதிமுக அணி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்கலாம் என்று தெரியாமல் பாஜக குழப்பத்தில் இருக்கிறது" என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து பிரசாரம் குறித்துப் பேசிய அவர், "ஈரோட்டில் நடைபெறுவது இடைத்தேர்தல் என்பதால் இந்த பிரசாரத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வர வாய்ப்பில்லை. எங்கள் அணியை திமுக தலைவர் ஸ்டாலின் மிகத் திறமையாக வழிநடத்தி வருகிறார்.. மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணரை போல் ஸ்டாலின் எங்கள் கூட்டணியை வழி நடத்தி வருகிறார்" என்றார்.

டெல்டா பகுதிகள்
டெல்டா பகுதிகளில் நெற்பயிர்கள் மழை காரணமாகச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறி வரும் நிலையில், அது குறித்துப் பேசிய அவர், "சமீபத்தில் பெய்த மழையால் காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் பாசனப் பகுதிகள் சேதம் அடைந்துள்ளது இது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து வரும் நிலையில், விரைவில் நிவாரணம் அறிவிப்பார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications