கி.வீரமணிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதம்.. பாஜகவை வீழ்த்த பெரியாரின் கொள்கையே அடித்தளமாம்!
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் மூத்த சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மக்களை பிரித்தாளும் பாஜகவின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைதான் அடித்தளம் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், 'இந்தியா' கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், " 'இந்தியா' கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது கடிதத்தில் கூறியிருப்பது போலவே, இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி என்பதை விட மேம்பட்டது. சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல் திட்டத்தின் மூலம் தான் மக்களைப் பிரித்தாளும் பாஜகவின் கருத்தியலை தோற்கடிக்க முடியும்.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது. நாடு தழுவிய சமூக நீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது.

தந்தை பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் என்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும். தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications