நேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கேட்டும் தனியே சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கவில்லையே என விரக்தியில் இருக்கிறாராம் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.
தமிழக காங்கிரஸில் திடீரென மேலே வந்தவர் அந்த எம்.எல்.ஏ. அதுவும் குறிப்பாக அந்த பதவி கிடைத்தது முதலே தலைகால் தெரியாமல்தான் இருக்கிறாராம் அவர்.
அத்துடன் சமூக ரீதியாக தமக்கு இருக்கும் அத்தனை லாபிகளையும் பயன்படுத்தி காரியங்கள் சாதிப்பதில் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகிறாராம். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கும் முட்டி மோதுகிறாராம்.

டெல்லி மேலிடம் பரிந்துரை
மேலும் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவரின் பதவி உயர்வுக்கு டெல்லி மேலிடத்தின் பரிந்துரையை கூட பெற்றார். இது தொடர்பாக நாமும் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். டெல்லி மேலிடத்தின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் அந்த காவல்துறை உயர் அதிகாரி மீது அத்தனை புகார்கள்.. அதனால் டெல்லி மேலிடத்தின் பரிந்துரையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வருடன் சந்திப்பு
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது அரசியல் தவிர்த்து பல விஷயங்கள் இருதரப்பிலும் பேசப்பட்டிருக்கின்றன.

நேரில் அப்பாயிண்ட்மென்ட் கேட்ட எம்.எல்.ஏ.
அதாவது கொரோனா நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கினர். அப்படி கொரோனா நிவாரண நிதி வழங்கி விட்டு கிளம்பும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்திக்க அவரிடம் அப்பாயிண்மெண்ட் கேட்டிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. ஏற்கனவே இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 2 முறை வெவ்வேறு வழிகளில் கேட்டும் சர்ச்சையான அந்த எம்.எல்.ஏவுக்கு நேரம் ஒதுக்கவில்லை முதல்வர் மு.க. ஸ்டாலின். நிச்சயம் ஏதேனும் பெரிய பரிந்துரையுடன் வருவார்; அல்லது டெல்லி மேலிட பரிந்துரையை மீண்டும் கொண்டுவருவார் என்று கருதியே தவிர்த்துவிட்டாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

எதற்காக தனியே நேரம் கேட்கிறார்?
ஆனால் விடா கண்டன் கொடா கண்டன் கதையாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வாய்ப்பை வைத்து மீண்டும் தனி அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும் என கிசுகிசுத்திருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. அதற்கும் கூட எந்த பதிலையும் சொல்லாமல் ஜஸ்ட் புன்னகையை மட்டும் உதிர்த்தாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒருபக்கம் இப்படி எத்தனை முறை முயற்சித்தாலும் நம்மை சந்திக்க மறுக்கிறாரே முதல்வர் என்கிற விரக்தியில் இருக்கிறாராம் அந்த எம்.எல்.ஏ. இன்னொரு பக்கம் எதுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனி அப்பாயிண்ட்மெண்ட் இவர் கேட்கிறார்? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ.












Click it and Unblock the Notifications