கமல்ஹாசனுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு.. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டார்
சென்னை: காங்கிரஸ் கட்சியையும் கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரினார். இதனைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஈரோடு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இதற்காக 11 அமைச்சர்கள் கொண்டு பெரும்படை திமுக தரப்பில் களமிறக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் - கமல் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்துள்ளார்
மநீம ஆலோசனை
முன்னதாக இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனை, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் சந்தித்தார்.
காங்கிரஸ்-க்கு கமல் ஆதரவு?
இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் - கமல்ஹாசன் இடையிலான சந்திப்பின் போது, மத்திய முன்னாள் அமைச்சர் தங்கபாலு, விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியையும் கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது. ஈரோடு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். இன்று மாலைக்குள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
அதேபோல், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 11 ஆயிரம் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. அதனை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியை இடைத்தேர்தலில் நாங்கள் பெறுவோம் என்று தெரிவித்தார்.