அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை நகரில் உள்ள சத்தியமூர்த்தி பவன் அலுவலகம் போராட்டங்களால் பரபரப்பாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வேட்பாளர் பட்டியலை எதிர்த்து சில தலைவர்கள் டெல்லிக்கு பறந்துள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு பட்டியல் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கனவே பல கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தல்
எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதையும் திமுக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருவதால், கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக சில மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் பட்டியல்
முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது. சில தலைவர்கள் 40 தொகுதிகள் வரை கோரிக்கை வைத்ததாகவும், இதனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் பல கட்ட ஆலோசனைகள் நடந்ததன் பின்னரே 28 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வேட்பாளர் தேர்வில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
செல்வப்பெருந்தகை
குறிப்பாக, செல்வப்பெருந்தகை தனது ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் வகையில் பட்டியல் தயாரித்ததாக சிலர் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் வெடித்தன. சில தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷ்டி பூசல்
குறிப்பாக சிலர் தங்களது ஆதரவாளர்களுகு சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கட்சி அலுவலக வளாகத்தில் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்களின் போது, ஒரு பெண் நிர்வாகி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு இருந்த மற்ற நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தொடர் குழப்பங்களால் கட்சி மேலிடத்தில் நடைபெற இருந்த முக்கிய ஆலோசனை கூட்டமும் தற்காலிகமாக தள்ளிப்போனது.
வேட்பாளர் தேர்வு
வேட்புமனு தாக்கல் 2 நாளில் முடியும் நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக இருந்த மாணிக்கம் தாகூர் தனது பதவியை ராஜினாமா கடிதத்தை தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராஜினாமா முடிவும் காங்கிரஸ் கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தலைமை
ஏற்கனவே வேட்பாளர் பட்டியல் விவகாரம் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பம், தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மீண்டும் தலைநகர் டெல்லியில் வேட்பாளர் தேர்வு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி இன்னும் 2 நாட்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications