அழிவு பாதையில் தமிழக காங்கிரஸ்.. என்னை கூட பூத் கமிட்டி பட்டியலை கொடுக்கவிடலை.. ஜோதிமணி வேதனை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் எம்பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான தம்மையே தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்கவிடாமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த குழு அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்னொரு பக்கம் திமுகவை கடன் பிரச்சனையை வைத்து சாடி வருகிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2021ல் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கரூர் எம்பி ஜோதிமணி மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார். அதில், எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து மக்கள் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக்கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. ராகுல்காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications