அட்டாக்கை ஆரம்பித்த பாஜக.. “காங்கிரஸ் அவமானத்தைதான் சந்திக்கும்..” - பி.எல்.சந்தோஷ்
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க போராடி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் விஜய்யால் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை. இப்படி இருக்கையில் காங்கிரஸ் அவமானத்தை சந்திக்கும் என்ற பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் விமர்சித்திருக்கிறார்.
காங்கிரஸ் விஜய்யுடன் சென்றது தொடர்பாக பாஜக வெளிப்படையான விமர்சனத்தை வைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், இதனை தற்போது பி.எல்.சந்தோஷ் தொடங்கியிருக்கிறார்.

அவர் தனது x பக்கத்தில், "தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: காங்கிரஸ் கட்சி இறுதியில் அவமானத்தையே சந்திக்க நேரிடும்" என்று விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், காங்கிரஸ் திமுகவை ஏமாற்றி விட்டது என்றும், பதவி ஆசை பிடித்ததால்தான் காங்கிரஸ் இப்படி செய்தது என்றும் விமர்சித்திருந்தார். இப்படியாக காங்கிரஸ் மீதான விமர்சனங்களை பாஜக தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸை பொறுத்தவரை பிளான் ஒன்றுதான். தேர்தலுக்கு முன்பு இருந்தே விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையெனில், திமுக வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்பதுதான் இக்கட்சியின் நிலைப்பாடு. திமுக அதிகாரத்தில் பங்கு கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் விஜய் முன் வந்திருந்தார். எனவே, விஜய் உடன் பயணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியது.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் ரிசல்ட்டும் விஜய்க்கு ஆதரவாக வந்திருப்பதால், காங்கிரஸ் ஜம்ப் அடித்திருக்கிறது. இது திமுகவுக்கு மட்டும் கிடையாது, பாஜகவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இந்த அதிர்ச்சிதான் தவெகவை ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் பாஜக தடுக்க காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. பெரிய கட்சியை அழைத்து ஆட்சி அமைக்க சொல்ல வேண்டும். அதுதான் ஆளுநரின் வேலை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்தித்து காங்கிரஸ் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications