ராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தள்ளிவிட்டு கைது செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுல் காந்தியை உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்
அதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேச மற்றும் மத்திய அரசுகள் மற்றும் யூபி காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். அப்போது வாணியம்பாடி நகர காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து விடுவித்தனர்.
ராகுல், பிரியங்காவை கைது செய்வதா? ஆயுதங்களையா கொண்டு போனாங்க? ப.சிதம்பரம் கடும் கோபம்!
இதனிடையே திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.. ராகுலை தள்ளிவிட்ட உத்தரப்பிரதேச காவல்துறையை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது.
இதனிடையே ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.