திமுக கூட்டணியில் 15 சீட்களுக்கு குறிவைக்கும் காங்கிரஸ்.. கேஎஸ் அழகிரி போட்டியா? அவரே கொடுத்த பதில்!
சென்னை: திமுக கூட்டணியில் 15 லோக்சபா தொகுதிகளை பெற முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்து, கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு வரை அனைத்தும் சூடுபிடித்துள்ளன. முக்கிய கட்சிகளில் சீட் பெறுவதற்காக ஏராளமானோர் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கேஎஸ் அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஒரு தொகுதியை தவிர மற்ற இடங்களில் வென்றது. கடந்த முறை வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக 6 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 15 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி அளித்துள்ளார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில், 15 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம். ஒரே ஒரு முறை தான் திமுக குழுவுடன் பேசியுள்ளோம். அடுத்த முறை, தொகுதிகள் லிஸ்ட் உடன் பேசுவோம். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகளாக 22 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம் 72% ஆக இருந்தது. 72% வெற்றி விகிதத்தின் மூலமாகவே காங்கிரஸ் கட்சியின் பலத்தை மதிப்பிடலாம்.
நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிப்பேன். கடந்த முறையும் நான் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின. காங்கிரஸ் மேலிட தலைமையும் என்னை போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் நான் மறுத்துவிட்டேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications