தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. அடுத்த கூட்டம் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில்? திரளும் 'தலை'கள்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில் 2-வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பால் பல மாநிலங்கள் தற்போதைய லோக்சபா தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் ஒடிஷா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மாநிலங்களில் இருந்து நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது! பல்வேறு மொழிகள் - இனங்கள் - வழிபாட்டு நம்பிக்கைகள் - பண்பாடுகள் - உடைகள் - உணவுகள் - பழக்க வழக்கங்கள் கொண்டதுதான், இந்தியா! இத்தகைய மாநிலங்கள் சுயாட்சித் தன்மையுடன் செயல்பட்டால்தான் -இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்! சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்! அனைத்துத் தரப்பு மக்களும் போராடியதால்தான், நமது நாட்டிற்கு விடுதலை கிடைத்தது!
இதனை உணர்ந்துதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த மேதைகள், இந்தியாவைக் கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் இந்த கூட்டாட்சித் தன்மைக்கு சோதனை வந்தாலும் - அதனை ஜனநாயக அமைப்புகள் - இயக்கங்கள் தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனையும் ஆபத்தும்தான் இப்போதும் வந்துள்ளது. இதனை உணர்ந்துதான் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம் என்றார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுசீரமைப்பு என்பது, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பானது மட்டுமே கிடையாது. நமது நாட்டின் ஆன்மா தொடர்பானது. இந்தியாவின் பலமே பன்முகத்தன்மைதான் என்பதை மத்திய அரசு உணர்ந்தாக வேண்டும். தென்மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் குறைக்கப்பட்டால் பாஜகதான் ஆதிக்கம் செலுத்தும். இதனை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பேசுகையில், "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடாது. அத்தகைய மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம் என்றார்.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநிலங்களின் அடுத்த கூட்டு குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications