லாரி முழுவதும் வெடிமருந்து! சென்னையில் தனியாக நின்றதால் பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சக்திவாய்ந்த வெடிமருந்துகளுடன் நின்றது. இதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே இன்று காலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது அந்த சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

வெள்ளை நிறத்தில் இருந்த லாரியின் நீலநிறத்தில் கண்டெய்னர் இருந்தது. திடீரென்று அந்த கண்டெய்னர் லாரி சாலையில் நின்றது. லாரியை அங்கிருந்து டிரைவரால் இயக்க முடியவில்லை.
இதனால் அந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ஏந்திய 6 போலீசார் அங்கு வந்து குவிந்தனர். லாரியின் முன்பும், பின்பும் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதாவது அந்த கண்டெய்னர் லாரியில் அதிகளவில் வெடிமருந்து இருப்பதாகவும், இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்ட தகவலும் தெரியவந்தது. அதாவது சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் வெடிமருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் இந்த கண்டெய்னர் லாரியில் வெடிமருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த லாரி சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்ட விபரமும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக மெக்கானிக் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தார். இதையடுத்து வெடிமருந்து இருந்த கண்டயெ்னர் லாரி அங்கிருந்து மணலியில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் இன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications