சிறை தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பினார் கோவை கலெக்டர்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பம்
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஜான் சாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டுள்ள பெயரை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ஒரு மாத ஊதியத்தை அபராதமாகவும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன் மற்றும் கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் சத்யன், வெள்ளலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கோவை முன்னாள் ஆட்சியர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவை தாமதமாக அமல்படுத்தியதாக கூறி தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications