தமிழக மகிளா காங். தலைவர் பதவிக்கு போட்டி... ரேஸில் முதலிடத்தில் உள்ள ஹசீனா சையத்
சென்னை: தமிழக மகிளா காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதால் அந்தப் பதவியை கைப்பற்ற மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில் மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், அந்தமான், லட்சத்தீவு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான ஹசீனா சையத் வெற்றிபெற்று விடுவார் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்க கே.எஸ்.அழகிரி பரிந்துரைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடும் போட்டி
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்ஸிராணி நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் அதற்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும், மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை பிடித்துவிட கடும் போட்டியும் நிலவுகிறது.

சிறுபான்மை
இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரசுக்கு ஹசீனா சையத் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். காரணம் அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருப்பதாலும், ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பதாலும் அவருக்கு அது பிளஸ் பாயிண்டாக உள்ளது.

தக்கவைக்க
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ள ஜான்சிராணி வரும் சட்டமன்ற தேர்தல் வரை தனது பதவியை தக்க வைக்க படாதபாடு பட்டு வருகிறார். மூன்றாண்டுகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டு நான்காண்டுகளாக அவர் இந்தப் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலின் போது அவர் இந்த பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

தேர்வு
மேலும், சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, உள்ளிட்ட பலரும் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். கர்நாடக எம்.எல்.ஏவும், தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளருமான சவுமியா ரெட்டி புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகளை தொடங்கி விட்டார். அதில் 5 பேர் கொண்ட பட்டியலையும் முதற்கட்டமாக தயார் செய்து டெல்லிக்கு அனுபிட்டார்.












Click it and Unblock the Notifications