வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்! எகிறும் எடப்பாடி... ஓரம்கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உத்தரவிட முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில், தர்மயுத்த சமயத்திலிருந்து இன்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றிகளையும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட பின்னடைவையும் சற்று அலசுவோம்.
Recommended Video
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு... தொலைக்காட்சிகளில் திடீரென பிரேக்கிங் செய்திகள் மின்னின... அனைத்து கேமராக்களும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா சமாதியை ஃபோக்கஸ் செய்துகொண்டிருந்தன... 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் சமாதி 2 மாதம் கழித்து மீண்டும் பிரேக்கிங் செய்தியாக வரக் காரணம், அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நடத்திய தர்ம யுத்தம்.
சின்னம்மா சின்னம்மா என்று 2 மாதங்களாக சசிகலா தலைமையின் சொல்படி நடந்துவந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென வீருகொண்டு எழுந்துவந்து ஜெயலலிதா சமாதியில் உதிர்த்த வார்த்தைகளும் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதிமுக மட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டிப்போட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட அவரால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்த மாஃபா.பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். இதனால் அதிலிருந்து தப்பினார் எடப்பாடி பழனிசாமி. தர்மயுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். சந்தித்த முதல் தோல்வி இதுதான்.

ஓபிஎஸுக்கு பிடித்த டீலிங்
அதன்பின்னர், கட்சி உங்களுக்கு ஆட்சி எங்களுக்கு என்ற டீலிங் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிடித்துவிட ஒரு வழியாக டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒன்றுசேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் வேட்பாளர்
முதலமைச்சராக எடப்பாடியே தொடர துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். இப்படியே ஆட்சியை நிறைவு செய்துவிட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற போட்டி எழுந்தது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசினர். சில நாட்கள் ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்களும் கருத்து மோதல்களுமே செய்தியாகின. ஒரு வழியாக இந்த முறையும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்று தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். இதிலும் எடப்பாடிக்கே வெற்றி கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
2021 தேர்தலும் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், அதிமுகவில் தோல்வியை பொருட்படுத்தாமல் அதிகாரப் போட்டிக்கு ஆயத்தமாகினார் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர். இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் யார் என இருவருக்கும் போட்டி தலைதூக்கியது. இதிலும் எடப்பாடி கை ஓங்க வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்து ஒருங்கிணைப்பாளராகவே தொடர்ந்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
அதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் பெரியளவில் ஆளும் திமுக அரசுக்கு ஈடுகொடுத்து செயல்படாமல் இருந்த அதிமுகவில், அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான மோதல் வெடித்தது. பல நாட்களாக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்துவந்த நிலையில், முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று இருவரில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தது எடப்பாடி தரப்பு. தர்ம யுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். வெளிப்படையாக சாதித்தது இது ஒன்றுதான்.

ஒற்றைத் தலைமை
நினைத்ததை சாதித்துவிட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அகம் மகிழ்வதற்குள் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அவருக்கு நெருடலை கொடுத்துவிட்டது. ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சு எழுத்து கைகலப்பு வரை சென்று மோதல் உச்சமடைய, பொதுக்குழுவே வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இன்று வெளியான தீர்ப்பில் வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தோல்வியே விடையாக கிடைத்திருக்கிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கிறது. இதில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications