முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கைதான சமையல்காரர்! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூரைச் சேர்ந்த சமையல் மாஸ்டரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின், ரசிகனான தனக்கு, அவரது படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்காததால் ஆத்திரத்தில் காவல்துறை அவசர தொலைபேசி எண்ணான 100க்கு போன் செய்து அவ்வாறு சொன்னதாக சமையல் மாஸ்டர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் ஒரு மர்மநபர். அப்போது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இல்லத்திற்கு இன்று வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், அது வெடித்துச் சிதறும் என்று மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்து விட்டார்.

தொலைபேசி அழைப்பு
இதனால் காவல்துறையினர் பரபரப்படைந்தனர். எங்கேயிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை கண்டறியும் பணிகளை ஆரம்பித்தனர். கால் வந்தது ஒரு செல்போன் நம்பர் என்பதை உறுதி செய்து கொண்டு, செல்போன் சிக்னல் உதவியுடன் அது யார் என்று தேடுதல் வேட்டை நடந்தது.

செல்போன் எண்
விசாரணையில், அந்த செல்போன் எண், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடையது என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். 40 வயதான அவர் ஏன் இப்படி ஒரு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் படம்
அப்போது கிடைத்த தகவல்கள்: பழனிவேல் மாம்பாக்கத்தில் ஒரு ஓட்டலில் சமையலராக பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர். தான் திமுக அனுதாபி என்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒன்றில் பாட்டு பாட வேண்டும் என தீராத ஏக்கத்துடன் இருப்பதாகவும் தெரிந்தவர்களிடம் கூறி வந்துள்ளார் பழனிவேல்.

வாக்குமூலம்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் அறிமுகம் ஆகுவதற்காக இப்படி ஒரு மிரட்டல் விடுத்தேன். இதன் மூலம் நான் ஃபேமஸ் ஆகலாம். உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று நினைத்தேன். இவ்வாறு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் பழனிவேல். உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள பழனிவேல் தற்போது சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications