கூட்டுறவு வங்கி நகைக்கடனில் சூப்பர் மாற்றம்.. 4478 சங்கங்களுக்கு 180 கோடி திட்டம்.. விவசாயிகள் குஷி
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை 180 கோடி ரூபாய் மதிப்பில் முழுமையாக கணினிமயமாக்கும் பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன.. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் 4,478 சங்கங்கள் நவீன மென்பொருள் வசதியுடன் இணைக்கப்பட உள்ளன.. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை முழுமையாக கணினிமயமாக்கும் பணிகள் தற்போது மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன.

கூட்டுறவு வங்கி நகைக்கடன்
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 25 மலைவாழ் சங்கங்கள் என மொத்தம் 4,478 சங்கங்கள் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.. இதற்காக சுமார் 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன..
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான மொத்த செலவில் 60 சதவீத தொகையை மத்திய அரசு வழங்குகிறது.. மீதமுள்ள தொகையில் 10 சதவீதத்தை நபார்டு வங்கி வழங்க, மீதி நிதியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.. மத்திய அரசு தனது பங்கான 108 கோடி ரூபாயில் ஏற்கனவே 40 கோடி ரூபாயை விடுவித்திருந்தது.. அதனை தொடர்ந்து இப்போது மேலும் 10 கோடி ரூபாயை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது.. இதன் மூலம் கணினிமயமாக்கும் பணிகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன..
கூட்டுறவு சங்கங்களுக்கு 180 கோடி திட்டம்
இந்த புதிய திட்டத்தினால் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.. சங்கங்கள் அனைத்தும் பிரத்யேக மென்பொருள் வாயிலாக அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.. இதன் மூலம் ஒவ்வொரு சங்கத்திலும் நடக்கும் வரவு செலவு கணக்குகள், கடன் வழங்கும் முறைகள் மற்றும் இதர பணிகளை அதிகாரிகள் சென்னையில் இருந்தே துல்லியமாக கண்காணிக்க முடியும்.. நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மை இதன் மூலம் உறுதி செய்யப்படும்..
தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் எக்கச்சக்கமாக நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.. கணினிமயமாக்கல் காரணமாக கடன் பெறுவது முதல் தவணை கட்டுவது வரை அனைத்தும் ஆன்லைன் முறையில் பதிவாகும்.. இதனால் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சேவைகள் சென்றடையும்.
அதுமட்டுமல்ல, கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் நவீனமடைவதால், சாதாரண மக்களும் வங்கி சேவைகளை மிக எளிதாகவும் வேகமாகவும் பெற இந்த திட்டம் வழிவகை செய்யும்.. பணப் பரிமாற்றங்களில் வேகம் கூடுவதோடு, முறைகேடுகள் நடப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இத்திட்டம் முழுமை பெறும்போது தமிழகத்தின் கூட்டுறவுத்துறை இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை...!!












Click it and Unblock the Notifications