பொதுக்குழுவை புறக்கணிக்கக் கோரி கடிதம் எழுதினாரா? மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு.. உண்மை என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழுவை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எந்த கடிதமும் எழுதவில்லை என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை நிச்சயம் பொதுக்குழு நடக்கும். அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார் என்று நேரடியாக சுட்டிக்காட்டினார். இபிஎஸ் தரப்பில் மிகவேகமாக பொதுக்குழு கூட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில், நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த ஆதரவாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், எல்லோரும் பொறுத்திருங்கள் அமைதியாக இருங்கள், நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பில், நாளை பொதுக்குழு நடக்குமா? நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், எதுவாக இருந்தாலும், மாலை சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும் என்று தாம் எந்தக் கடிதமும் எழுதவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதனால், நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப் போகிறேன் என்று கூறியுள்ளதால், எது என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications