18 வயதுக்கு மேற்பட்டோர் கவனத்திற்கு.. கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது. இதனிடையே பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
தொடர்ந்து மாநில அரசுகள் தரப்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதிகளவில் கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் மத்திய மற்றும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்தி கொள்கின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி 6 மாதங்கள் முடிந்தவர்கள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
Recommended Video
இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.