கொரோனா 2ம் அலை கைமீறி விட்டது... 40வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தயார் - தமிழக அரசு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் 2ம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வரக்கூடிய நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் 2ம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கமான விசாரணை தொடங்கியது. அச்சமயம் வேறொரு வழக்கில் ஆஜராகி இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம், 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நீதிமன்றங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுரைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து நீதிபதி கேட்டார்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இந்த 2ம் அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகலில் தலைமை நீதிபதியை சந்திக்குமாறு தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை கேட்டறிந்துகொண்ட தலைமை நீதிபதி, அதற்கு பின்பு உயர்நீதிமன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று கட்டுபாடுகள் தொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகளில் ஏற்கனவே பல உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications