எச்சரித்தும் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி.. வேலையை காட்டிய மார்டின் குடும்பம்.. கோதாவில் லீமா ரோஸ்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிகார ஆட்டம் மற்றும் உட்கட்சிப் பூசல் தற்போது அதிமுகவில் அரங்கேறத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் திணறி வரும் நிலையில், அவருக்குக் கைகொடுக்க அதிமுகவின் ஒரு பகுதி எம்.எல்.ஏக்கள் தயாராகி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக 'லாட்டரி அதிபர்' மார்ட்டின் குடும்பம் உருவெடுத்துள்ளது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கிளம்பியுள்ள 36 எம்.எல்.ஏக்கள் கொண்ட அதிருப்திக் குழுவில், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் (அதிமுக எம்.எல்.ஏ) மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். இக்குழுவிற்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமை தாங்கி ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நகர்வின் பின்னணியில் மார்ட்டினின் மருமகனும், தவெக தலைவர் விஜய்யின் வலது கரமாகச் செயல்பட்டு வருபவருமான ஆதவ் அர்ஜுனா மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ட்டின் குடும்பம் தங்களது அரசியல் மற்றும் பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி, அதிமுகவை உடைத்து விஜய்யின் ஆட்சியை நிலைநிறுத்த திரைமறைவில் காய்நகர்த்தி வருகிறது.
அதிமுகவில் மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க 32 எம்.எல்.ஏக்கள் போதுமானது. ஆனால் தற்போது 36 பேர் லீமா ரோஸ் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வியூகத்தால் அணி திரண்டுள்ளதால், அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமியால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதிமுகவில் திடீரென லீமா ரோசுக்கு எம்எல்ஏ வேட்பாளராக வாய்ப்பு தரும்போதே இது ஆபத்து என அதிமுக சீனியர்கள் எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சீட் கொடுத்திருந்தார். இப்போது நிலைமை மாறிவிட்டது. இது எடப்பாடிக்கே ஆபத்தாக போய்க்கொண்டு உள்ளது.
விஜய்க்கு தற்போது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு என்பது 'பார்டர்' கணக்காகவே உள்ளது. இத்தகைய சூழலில், மார்ட்டின் குடும்பத்தின் ஆதரவோடு அதிமுகவின் ஒரு பெரிய பகுதி விஜய்க்கு ஆதரவு அளித்தால், அது விஜய்க்கு ஒரு நிலையான ஆட்சியை வழங்கும்.
அதேசமயம், இது அதிமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடி அரசியல் என்ட்ரி, தமிழகத்தின் அதிகார மையத்தை மார்ட்டின் குடும்பத்தின் பக்கம் திருப்பியுள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications