லீடு எடுக்கும் லீமா ரோஸ்? 36 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு? கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா?
சென்னை: சி.வி.சண்முகம் தலைமையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது தவெகவுக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) தேவையான மற்ற இருவரின் ஆதரவைத் திரட்டுவதில் அவர் தீவிர சவால்களை எதிர்கொண்டிருந்தார்.

அதிமுகவில் பிளவு? 36 எம்எல்ஏக்களின் ரகசிய ஆலோசனை
விஜய்க்கு ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுகவுக்குள் பெரும் அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, பெருந்துறை ஜெயகுமார் உள்ளிட்ட ஐந்து முக்கிய எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் தலைமையில் 36 அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிமுகவின் ஒரு பகுதியினர் விஜய்யைத் தங்களது அரசியல் வளையத்திற்குள் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர்.
தீர்மானிக்கும் சக்தியாக விசிக
இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார் என சொல்லப்பட்டது. விசிகவின் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தால், அவர் முதலமைச்சராவதற்கான சட்டப்பூர்வ பாதை எளிதாகும்.
ஆட்சியின் நிலைத்தன்மைக்கு எழும் சவால்கள்
விஜய் ஆட்சி அமைத்தாலும், குறைந்த பெரும்பான்மையுடன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இடதுசாரிகளின் எதிர்ப்பு:
மக்கள் நலன் சார்ந்த சட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் இடதுசாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான மசோதாக்கள் கொண்டுவரப்பட்டால் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறக்கூடும்.
அதிமுகவின் தேவை: ஆட்சி கவிழாமல் இருக்க அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சியின் ஆதரவு விஜய்க்கு அத்தியாவசியமாகிறது; இதை அவராலும் மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
ஒட்டுமொத்தத்தில், 36 அதிமுக எம்எல்ஏக்களின் இந்தத் தனித்த ஆலோசனை, தமிழக அரசியலில் ஒரு புதிய வியூகத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அதிமுக எம்எல்ஏக்கள் பதவியில் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கு கிடைத்துவிடும். ஆனால் இந்த சான்ஸை விட்டால் 10 ஆண்டுகளுக்கு பதவி கிடையாது. இதனால் சமயோஜிதமாக முடிவு செய்து தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிமுகவை பிளவுப்படுத்திக் கொண்டு சிவி சண்முகம் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்கிறார்கள். அதாவது ஒரு கட்சியின் சட்டசபை உறுப்பினர்களில் 3 இல் 2 பங்கு எம்எல்ஏக்கள் கட்சி தாவினால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பதுதான் விதி.
விஜய்க்கு தற்போது விசிகவின் ஆதரவு கிடைத்துவிட்ட நிலையில் அவரிடம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இது பெரும்பான்மைக்கான நம்பர் என்றாலும் எந்த நேரத்தில் விஜய்யின் ஆட்சிக்கு ஆபத்து நேரலாம். எனவே 120 முதல் 125 வரை இருந்தால்தான் சேஃப் என்று அர்த்தம். இதனால் ஆதவை வைத்து சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications