டாப்பில் சென்னை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. 24 மணிநேரத்தில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019ல் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 2021 வரை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடக்கி போட்டது. அதோடு பல லட்சம் மக்கள் கொரோனாவால் பலியான நிலையில் பல கோடி பேர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர்.
இதையடுத்து 2021க்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது சரிய தொடங்கிய நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடு கொண்ட ஜேஎன்.1 வைரஸ் தான் காரணமாகும். குறிப்பாக இந்தியாவில் கேரளாவில் தினசரி பாதிப்பு என்பது 200யை கடந்து உள்ளது.

தமிழ்நாட்டிலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒற்றைப்படையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலாக 3 பேர், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 பேர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவள்ளூா் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications