"அடங்க மாட்டீங்களாடா.. அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிடுவேன்.." "கருப்பு" கலரில் மிரட்டிய கொரோனா
கொரோனாவைரஸ் விழிப்புணர்வு குறித்த வீடியோ வைரலாகிறது
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த வீடியோவில் கொரோனாவே கோபப்பட்டு பேசுகிறது..!
இந்த தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.. எனினும் தொற்று பாதிப்பு குறையவில்லை..
பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. அதனால்தான் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்புகிறார்கள்..

தண்டனைகள்
கொரோனா விதிகளை மீறுவோர்க்கு நூதன தண்டனைகளையும் தந்து வருகிறார்கள். இதுபோக, காவல்துறையும், தன்னார்வ நிறுவனங்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த விழிப்புணர்வு வீடியோக்கள் ஒவ்வொன்றும் மக்களை கவரும் வகையில் அமைந்து வருவதால், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
கறுப்பு சட்டை
இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி உள்ளது.. அதில் ஒருவர் கருப்பு நிற மேக்கப்புடன், கறுப்பு சட்டை அணிந்து, காடுபோல் வளர்ந்த தலைமுடி விக்கை வைத்து கொண்டுள்ளார்.. அந்த தோற்றத்தை பார்த்ததும் ஒருவர் யார் நீ என்று கேள்வி எழுப்புகிறார்.. அதற்கு அந்த நபர், ஏன் உனக்கு தெரியாது, நான்தான்டா கொரோனா என்கிறார்,. எப்பதான், எங்க நாட்டை விட்டு போவே? என்று அடுத்த கேள்வி கேட்கிறார்.

ஜெர்மனி
அதற்கு அந்த கொரோனா நபர், "எங்கடா என்னை போக விடறீங்க? நாசமாக போறவங்களா? ஸ்பெயின் போனேன், அங்கே 3 மாசம், அமெரிக்காவில் 3 மாசம், ஜெர்மனியில் 3 மாசம் இருந்தேன்.. 2 வருஷமா சைனாவில் என் பொண்டாட்டி, புள்ளைங்க அனாதையா தவிக்கிறாங்க.. அதைகூட போய் பார்க்க முடியா.. எப்படா என்னை அனுப்புவீங்க? ஏன்டா இப்படி பண்றீங்க?

கறிசோறு
ஒரு மாஸ்கை போடுவங்கடா, கை காலை கழுவுங்கடான்னு சொன்னால், கல்யாண வீட்டில் கறிசோறு திங்கறீங்க, கருமாதி வீட்டில் சரக்கடிச்சிட்டு கட்டிப்பிடிக்கறீங்க? ஏன்டா? இன்னொரு கொடுமை தெரியுமா, போற வருஷம் கொரோனாவில் சமூக இடைவெளி சமூக இடைவெளின்னு சொன்னாங்க, ஆனால், 7, 8 புள்ளைங்களை பெத்து தள்ளிட்டாங்க.. இதுதான் சமூக இடைவெளியாடா?

அரசாங்கம்
நீங்க என்னைக்கு அரசாங்கம் சொல்றதை கேட்கறீங்களோ, என்னைக்கு இந்த போலீஸ்காரங்க சொல்றதையும், சுகாதார பணியாளர்கள் சொல்றதையும் கேட்கறீங்களோ, அதன்படி நடந்துக்கிட்டா மட்டும்தான்டா நான் போவேன்.. இல்லேன்னா, எல்லாரையும் அடிச்சு துவம்சம் செய்துட்டு போயிடுவேன்.. நீ வாழ்றதும், சாவறதும் உன் கையிலதான்" என்கிறார்.

வைரல்
நம் மக்கள் பயமின்றி, அரசின் சொல்பேச்சையும் கேட்காமல் அலட்சியமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து, கொரோனாவுக்கே கோபம் வந்து திட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications