தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. இணை நோய்கள் இல்லாத 11 பேர் பலி.. இளம் வயது மரணங்களும் அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமான, இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 88 பேர் இறந்துள்ளனர் என்கிறது அரசு புள்ளிவிவரம்.
கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும் இறப்பு விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வருகிறது. ஆனால் விடுபட்ட 444 பலி எண்ணிக்கையை கணக்கில் எடுத்துள்ளதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இதனால், கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை முதலிலேயே வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவு
இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 6 ஆயிரத்து 472 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மணி நேரத்தில் 88 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில், இது தான் அதிகமாகும்.

இணை நோய்கள் கிடையாது
உயிரிழந்த 88 பேரில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதில் 11 பேருக்கு இணை நோய்கள் என்று சொல்லக்கூடிய வேறு எந்த நோயும் கிடையாது. கொரானா வைரஸ் தாக்கத்தால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். காலதாமதமாக மருத்துவர்களை அணுகியது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இளம் வயது
50 வயதுக்கு உட்பட்ட 17 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் மிக மோசமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 24 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது கவலையளிக்க கூடிய செய்தியாக உள்ளது.

கொரோனா பலி
தமிழகம் முழுக்க கொரோனா பலி எண்ணிக்கை, 3232 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 1947 என்ற அளவில் பலி எண்ணிக்கை உள்ளது. 5210 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1.36 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 52939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு, 192964 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications