சென்னை மக்கள் கவனத்துக்கு.. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வரும் மார்ச் 31ம் தேதி நிறுத்தம்
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வரும் மார்ச் 31ம் தேதி நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கும், பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும் ஆம்னி பேருந்துகள் வரும் 31ம் தேதி வரை இயக்கப்படாது.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தினமும் பல்லாயிரம் பேர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இதுவரை 400 பேருக்கு பரவி உள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9000 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை லாக்டவுன்
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவியதையடுத்து மத்திய அரசு இந்த மாநிலங்களை லாக் டவுன் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு பேருந்துகள் உள்பட வாகனங்கள் இயங்காது-
புறநகர் ரயில்களும் ரத்து
இந்த சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
31வரை இயங்காது
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் நிறுத்தம் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கும், பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும் ஆம்னி பேருந்துகள் வரும் 31ம் தேதி வரை இயக்கப்படாது. ஆம்னி பேருந்துகளை போல் அரசு பேருந்துகளும் இதே முடிவினை எடுத்துள்ளளன. தமிழகம் முழுவதும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிற நகரங்களுக்கு போக முடியாது
ஏற்கனவே ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள், புற நகர் ரயில் சேவைகள் முழுமையாக சென்னையில் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆம்னி பேருந்துகள் சேவையும் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல முடியாத அளவுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள், விடுதிகள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லவே முடியாது.