காப்பாத்துங்கப்பா.. துரைமுருகன் வைத்த வேண்டுகோள்.. தொடங்கிய டெஸ்ட்.. சட்டசபையில் கொரோனா சோதனை!
தமிழக சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இன்று கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இன்று கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் வரிசையாக சோதனை செய்யப்பட்டது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால் அவருக்கு உடனடியாக இந்த வைரஸ் குணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
துரைமுருகன் என்ன சொன்னார்
இந்த நிலையில் சட்டசபையில் கடந்த வாரம் திமுக பொருளாளர் எம்எல்ஏ துரைமுருகன் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அதில், இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா சோதனைகள் சரியாக செய்யப்படவில்லை. சட்டசபையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சட்டசபையில் உடனே மருந்து அடிக்க வேண்டும்.
மருந்து எப்படி
எல்லா இடங்களிலும் சட்டசபையில் மருந்து அடிக்க வேண்டும். எல்லோருக்கும் மாஸ்க் கொடுக்க வேண்டும். பயமாக இருக்கிறது. காப்பாத்துங்கப்பா. எங்களுக்கு எல்லாம் வயசாகிடுச்சு. கொரோனா வைரஸால் யாராவது பலியாகிவிட்டால் என்ன செய்வது. மறுபடியும் இடைத்தேர்தலை சந்திக்க முடியாது. தேர்தல் தேர்தல் என்று மீண்டும் மீண்டும் அலைய முடியாது, துரைமுருகன் கடுமையாக , அதே சமயம் ஜாலியாக குறிப்பிட்டு இருந்தார்.
என்ன சோதனை
இந்த நிலையில் துரைமுருகன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டசபையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இன்று கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் வரிசையாக சோதனை செய்யப்பட்டது. கொரோனா சோதனை கருவி மூலம், எல்லோருக்கும் சோதனை நடந்தது.
சுத்தம் செய்தனர்
அதேபோல் வெளியே கை கழுவ அதற்குரிய கிருமி நாசினி கிரீம்கள் வைக்கப்பட்டு இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் என்று எல்லோருக்கும் சோதனை நடந்தது. அதேபோல் சட்டசபை வளாகத்தை அதிகாரிகள் சுத்தம் செய்தனர். சட்டசபைக்கு வெளியே அவசர தேவைக்காக மருத்துவ குழு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.