தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! திருமணங்களில் லைவ் காட்டன் கேண்டி கவுன்ட்டருக்கும் தடை
சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பஞ்சுமிட்டாய்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரும் ஒரு வித இனிப்பு பொருள். சர்க்கரை பாகினால் ஒரு இயந்திரத்தின் மூலம் செய்யப்படும் இந்த பொருளை மொத்தமாக அழுத்தினால் மிகவும் சிறிய அளிவிலேயே மிட்டாய் இருக்கும். இந்த சிறிய அளவுதான் இயந்திரத்தின் மூலம் பஞ்சு போல் பெரியதாக இருக்கிறது. இதில் ரசாயனம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த பஞ்சு மிட்டாயை நிறைய சாப்பிட்டால் இருமல் வரும். இந்த நிலையில் புதுவை கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன் பி எனும் ரசாயனம் இருந்தது என தெரியவந்தது. பச்சை, ஊதா, பிங்க் நிறங்களை கொண்டு வர பல்வேறு நிறமிகள் சேர்க்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அது பல் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும். உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
முதல்வருடனான சந்திப்பின் போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். விரைவில் உணவு பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அது போல் சுப காரியங்களின் போதும் பஞ்சு மிட்டாய் தயாரிப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications