சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே?.. திமுகவுக்கு விஜய் சரமாரி கேள்வி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே என்று திமுகவினருக்கு கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் "சிங்கப்பெண் அதிரடிப்படை" அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பிரச்சனை பரவிக் கிடக்கிறது. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பிரச்சனைகள் தான்.இந்த பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே என கேள்வி எழுப்பிய அவர், தற்போது எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்புவது உண்மையான அக்கறையாகத் தெரியவில்லை என்றும், அது அவதூறு அரசியலாகவே தெரிகிறது என்றும் விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு அரசை விமர்சிக்கும் உரிமை இருப்பதை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், ஆனால் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது நடந்தவற்றை சிந்தித்துப் பார்த்து, அதன் பின்னர் நடுநிலையான விமர்சனங்களை முன்வைத்தால் அது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.
மேலும், கடந்த 11 மாதங்களாக தமிழகத்தில் நிரந்தர சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த பல சம்பவங்களுக்கு தற்போது விடையைக் கண்டுபிடிக்கிறோம். சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியது யார், காவல்துறையை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் அதனை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் விஜய் தனது உரையில் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications