ஒன்னும் சரியில்லையே.. ஒப்புக்கு நடந்த விசாரணை! செந்தில் பாலாஜி வழக்கில் DVAC-ஐ விளாசிய நீதிமன்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மின்மாற்றி கொள்முதல் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பதவிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.397 கோடி அளவிலான முறைகேடு குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மாநில அரசும், தொடர்புடைய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தாமதித்த விதம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கில் உண்மையை மறைக்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக அதிமுக சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், மின் மாற்றிகள் கொள்முதல் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டான்ஜெட்கோ தரப்பில், ஒவ்வொரு மின் மாற்றியும் குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகவும், இதனால் லாபம் தான் என கூறியது.
மின்மாற்றி ஊழல்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மற்றும் சில அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தாமதம் செய்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என்று கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, குற்றச்சாட்டு எழுந்த பிறகு நீண்ட காலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்ததாக சுட்டிக் காட்டியுள்ளது. இந்த வழக்கில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்ட விஷயம், விசாரணை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதுதான்.
டிவிஏசி
முதலில் விரிவான விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், பின்னர் அது ஆரம்ப நிலை விசாரணையாக மாற்றப்பட்டு குறுகிய வரம்புக்குள் மட்டுமே நடத்தப்பட்டது. இதுவே உண்மையை முழுமையாக வெளிக்கொணர முயற்சி செய்யப்படவில்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், குற்றச்சாட்டில் பெயர் கூறப்பட்ட அனைவரையும் விசாரணைக்குள் கொண்டு வராமல், ஒரே ஒருவரை மட்டும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயர்நீதிமன்றம்
இது நடைமுறை ரீதியாக சரியானதல்ல என்றும், விசாரணையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஆரம்ப நிலை விசாரணை என்ற பெயரில் மிக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டதும், பல ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதும் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இதுபோன்ற முழுமையான ஆய்வு நடத்தப்பட்ட பிறகும் வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை
இந்த சூழ்நிலையில், உண்மையை முழுமையாக வெளிக்கொணர சுயாதீனமான அமைப்பின் விசாரணை அவசியம் என்று நீதிமன்றம் கருதியது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இரண்டு வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணைக்கு மாநில அரசு, மின்சார வாரியம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
சுதந்திரமான விசாரணை
அதுமட்டுமல்லாமல், விசாரணை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிப்பதற்காக அல்ல என்றும், சுதந்திரமான விசாரணை தேவை என்பதற்காக மட்டுமே என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் நடைபெறும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications