கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 26 பேருக்கு கொரோனா - ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை
கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் 26 உள்நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மனநல காப்பக கொரோனா நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் 26 உள்நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வயதானவர்கள் இரண்டு பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 24 பேர் காப்பக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் மொத்தம் 800 நோயாளிகள் உள்ளனர். அங்கு அருகருகில் இருந்த இரண்டு ஆண்களுக்கான வார்டுகளில் 120 பேர் தங்கியுள்ளனர். அதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற வார்டுகள் அருகில் இல்லாததால் 120 பேர் தவிர மற்றவர்களுக்கு அறிகுறிகள் வந்தால் பரிசோதனை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 24 பேர் காப்பக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வார்டுகளில் இருந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை எடுத்ததில் நெகடிவ் என தெரிய வந்தது.
மனநல காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காப்பக பொறுப்பு இயக்குநராக இருக்கக் கூடிய சரவண ஜோதி,காப்பக வளாகத்தில் உள்ள 24 நோயாளிகளுக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. குணமடைந்த பிறகு அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நோயாளிகளும் அறிகுறிகள் இல்லாமல் , உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications