முட்டாள்களே வாயை மூடிக்கிட்டு வீட்ல இருங்க .. கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை.. குஷ்பு ஆவேசம்
சென்னை: கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை. அது கடவுளைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதை, இதை சமூக பிரச்சனையாக மாற்ற முயலும் முட்டாள்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடுமையாக சாடியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். 152 பேர் குணமடைந்துள்ளனர். 1545 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 325 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வதாக டெல்லியில் 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 கிராமங்கள்.. 40,000 பேர்.. 70 வயது முதியவரால் உண்டான பரபரப்பு.. கொரோனா
மத்திய அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களிடையே சமூக இடைவெளியை உருவாக்க வேண்டியது அவசியம். எனவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. , 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது.
பலருக்கு கொரோனா
இந்நிலையில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நடிகை குஷ்பு காட்டம்
இதைவைத்து முஸ்லிம்களால்தான் அதிகம் கொரோனா வைரஸ் பரப்புவதாக சமூக வலைதளத்தில் பலரும் பதிவுகளை வெளியிட தொடங்கினார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையில் மத ரீதியாக கருத்துக்களை வெளியிடுதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "இந்த சூழலில் மிகவும் அச்சப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சில முட்டாள்கள் கொரோனா வைரஸை ஒரு சமூகப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள் இந்த கொரோனா வைரஸுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதுமில்லை. கடவுளைக் கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும்.
|
மதம் கிடையாது
எல்லா மதக் கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி. அல்லது கேரளாவோ எதுவாக இருந்தாலும் சரி, எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது." இவ்வாறு குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.