இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்.... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை
சென்னை: இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகையும் கடந்த வாரம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மற்றொரு தடுப்பூசி ஒத்திகை இன்று நாடு முழுதும் உள்ள 33 மாநிலங்களில் உள்ள 736 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெற்ற ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி குறித்து செய்திகளை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதுவரை மூன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்துத் தெரிந்து கொண்டுள்ளனர்" என்றார்.
இந்தியாவில் கோ-வின் என்ற மொபைல் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள், முன்களபணியாளர்கள் என மொத்தம் ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு முதல்கட்டமாகத் தடுப்பூசி வழங்கவுள்ளது. புனேவிலுள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து நாட்டிலுள்ள பல பகுதிகளுக்குத் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.