காலையிலேயே நற்செய்தி.. கொரோனா 'நெகட்டிவ்'.. பிரேமலதா 'ஹேப்பி'.. தேமுதிக நிம்மதி!
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
Recommended Video

கடந்த ஒரு வாரமாகவே தேமுதிகவினர் அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகளை கடந்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றம், தங்களுக்கு ஜுனியரான அமமுக கூட்டணியில் 60 இடங்களில் சீட் என்று டல் மோடில் அக்கட்சியினர் இருந்து வந்தனர்.
இதன் நிலையில், கட்சியில் பம்பரமாய் சுழன்று வந்த எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருக்கிறார். அதுமட்டுமின்றி சுதீஷின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுதீஷ் பிரசாரம் மேற்கொள்ளாவிருந்த பல தொகுதிகளில் நட்சத்திர பேச்சாளர் இல்லாமல் திணறி வருகிறது தேமுதிக.

உற்சாக வரவேற்பு
இதனால், உடல் நலம் குன்றியுள்ள விஜய்காந்தே பிரசாரத்துக்கு களமிறங்கினார். நேற்று (மார்ச்.24) முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில், தனது கட்சியின் வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், வேனில் நின்றவாறு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் பார்த்து கும்பிட்டும், கை அசைத்தும் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொரோனா பரிசோதனை
இதற்கிடையே, கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், வேட்புமனு தாக்கலின்போது சுதீஷுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தேமுதிகவினர் கோபம்
அதற்கு பிரேமலதா விஜயகாந்த், பிரசாரம் முடிந்ததும் தான் தங்கியுள்ள அறைக்கு வாருங்கள், அங்கு டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என கூறினார். இருப்பினும், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று கறார் காட்ட, ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

அனைவருக்கும் சோதனை
அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரேமலதா விஜயகாந்த் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றதும், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு அங்கு வந்த அதிகாரிகள், நேற்று மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடன் இருந்த விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர்கள் ராஜ், ஜானகிராமன் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

நிம்மதி பெருமூச்சு
இந்நிலையில் இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிப்பிடும் 'நெகட்டிவ்' என்று ரிசல்ட் வந்துள்ளதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேமுதிகவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications