கொரோனா தடுப்பூசி- அமைச்சர்களுக்கு ரேங்க் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. சாட்டை விரைவில் சுழலும்?
சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தை முன்வைத்து தமிழக அமைச்சர்களுக்கு ரேங்க் வழங்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் விரைவில் சில அமைச்சர்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது கண் அசைவிற்கேற்ப சுகாதார பணிகளில் வேகம் காட்டி வருகிறார் அமைச்சர் மா.சு.ப்பிரமணியன்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இது ஒரு புறமிருக்க, தடுப்பூசி திட்டத்தை இயக்கமாக செயல்படுத்துவதை ஒரு வேள்வி போல நடத்த வேண்டும்; தடுப்பூசி திட்டத்தில் எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது; தடுப்பூசியை போடுவதில் தமிழகம் தன்னிறைவை பெற்றிருக்க வேண்டும்; இந்தியாவுக்கு தமிழகம் தான் முன் மாதிரியாக இருக்கிறது என்று பெயரெடுக்கும் வகையில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் அனைவரையும் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தடுப்பூசி முகாம்கள்
அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இதற்கான பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன்படியே மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சிகள் மும்முரமாகவும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தடுப்பூசி திட்டத்தை எந்தெந்த மாவட்டம் சிறப்பாக செயல்படுத்தியிருக்கிறது என தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு பட்டியலை நேற்று வாசித்தார்.

மாவட்டங்கள் தரம் பிரிப்பு
அதாவது, தடுப்பூசியில் சிறந்து விளங்கிய சுகாதார மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் தரம் பிரித்திருந்தார். குறிப்பாக, எக்ஸ்லண்ட், வெரி குட், குட், நீட் இம்ப்ரூவ்மெண்ட், புவர் ஃபெர்ஃபாமண்ட்ஸ் என 5 கேட்டகிரியில் மாவட்டங்களை வகைப்படுத்தியிருந்தார் இறையன்பு. மாவட்டங்களை தரம் பிரித்த கையோடு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகள், பாராட்டுதல்கள், பரவாயில்லை; கூடுதல் கவனம் தேவை, எச்சரிக்கை என பல்வேறு உணர்வுகளை ஆட்சியரிடம் காட்டியிருக்கிறார் இறையன்பு.

அமைச்சர்கள் மீது நடவடிக்கை?
இந்த நிலையில், ஃபெர்ஃபார்மன்ஸை அடிப்படையாக கொண்டு மாவட்டங்களை தலைமைச் செயலாளர் தரம் பிரித்திருப்பதால் அந்தந்த மாவட்ட அமைச்சர்களையும் இதே வரிசையில்தான் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தரம் பிரித்து வைத்திருப்பதாக தெரிகிறது. அதனால், விரைவில் அமைச்சர்களை எச்சரிக்கை செய்வார் என சொல்கின்றனர். ஏற்கனவே அமைச்சர்களுக்கு மார்க் போட்டு வைத்திருக்கும் ஸ்டாலின், தற்போது சுகாதார விசயங்களை மையப்படுத்தி இறையன்பு தரம் பிரித்திருக்கும் பட்டியலையே அமைச்சர்களிடம் உதாரணமாகச் சொல்லி மிக மோசமான செயல்பாடுகளாக உள்ள அமைச்சர்களை எச்சரிக்கை செய்யும் விதத்தில் கடுமையாக நடந்து கொள்வார் என தெரிகிறது. மேலும், அமைச்சர்கள் மீது வருகிற பல்வேறு வகையிலான புகார்களையும் ரேங்க் பட்டியலோடு இணைத்து வைத்திருக்கிறாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த அமைச்சர்கள் சிலருக்கு எதிராக விரைவில் சாட்டையை சுழற்றுவார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications