“என் தம்பி”.. ஆஹா ஓஹோ பாராட்டு.. கட்டியணைத்து உச்சி முகர்ந்த சிபிஆர்.. நெகிழ்ந்துபோன அண்ணாமலை!
அண்ணாமலையைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்துள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
சென்னை : அண்ணாமலை எனும் சீறி வரும் சிங்கத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை என்றும், அண்ணாமலை நேற்று வரை என் தலைவராக இருந்தார், இன்று என் தம்பியாக மாறி உள்ளார் என்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பியும், தேசிய கயிறு வாரிய முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், இன்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சிபிஆர் - அண்ணாமலை நெருக்கம்
இந்த விழாவின்போது, சி.பி.ராதாகிருஷ்ணன் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடையே காணப்பட்ட நெருக்கம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருவரும் அருகருகே அமர்ந்தபடி கைகளை இறுக்கமாகப் பிணைத்திருந்தனர். சிரித்துச் சிரித்துப் பேசியபடி இருந்தனர். பாஜக சீனியர்களை அண்ணாமலை பொறுப்புக்கு வந்தபிறகு ஓரங்கட்டி விட்டார் என சீனியர்கள் புழுக்கத்தில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த சூழலில், இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் வார்த்தைக்கு வார்த்தை அண்ணாமலையைப் புகழ்ந்தார்.

இன்று என் தம்பி
இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாடு பாஜக மகத்தான இயக்கமாக தனது பயணத்தைத் தொடரும். புதிய சிகரங்களை பாஜக தொடும். அண்ணாமலையின் தலைமை அப்படிப்பட்டதாக இருக்கிறது. அண்ணாமலை எனும் சீறி வரும் சிங்கத்தை தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை. அண்ணாமலை நேற்று வரை எனது தலைவராக இருந்தார், இன்று என் தம்பியாக மாறி உள்ளார்.

அண்ணாமலை தலைமை
மாற்று இயக்கத்தவர்களின் நல்ல கருத்தையும் நமதாக்கி கொள்ள வேண்டும். யாரிடம் எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கண்டறிந்து பொறுப்பை வழங்க வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாமலை தலைமை அது போல இருக்கிறது. அனைவரையும் அரவணைத்து, அனைவரிடமிருந்தும் வேலை வாங்கும் திறமை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருக்கிறது.

அண்ணாமலையின் நற்குணம்
மற்றவர்களிடம் இல்லாத ஒரு நற்குணம் அண்ணாமலைக்கு இருக்கிறது என்றால் அது யாரைப் பார்த்தாலும் அவர்களது மனதில் இடம்பிடிக்கும் வகையில் அன்பான சொல்லுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். நேர்மைக்காகப் போராடும் மகத்தான தலைவராக அண்ணாமலை இருக்கிறார். தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும், பிரார்த்தனையும் வேண்டும்." எனப் பேசியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கட்டியணைத்து உச்சி முகர்ந்த சிபிஆர்
ஆளுநராக பொறுப்பேற்பவர் எந்த அரசியல் கட்சிப் பொறுப்புகளிலும் இருக்க கூடாது என்பது விதிமுறை. எனவே பாஜகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதம் கொடுக்க தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து அண்ணாமலை பேசிய நிலையில், நெகிழ்ந்து போய் எழுந்து அவரை கட்டியணைத்து அவரை உச்சி முகர்ந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications