சென்னை மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி..10 நாள் காவலில் விசாரிக்க கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி மனு
சென்னை: சிவசங்கர் பாபாவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பலர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதன்பேரில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவசங்கர் பாபா கைது
இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதன்பின்பு டேராடூனில் இருந்த சிவசங்கர் பாபாவை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா அங்கு இருந்து தப்பினார். ஆனால் தலைநகர் டெல்லியில் வைத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

தீவிர விசாரணை
நேற்று நள்ளிரவு அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் செங்கல்பட்டு மஹிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். உடல்நிலையை காரணம் காட்டி, அங்கு அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடந்தினார்கள். கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கும் விசாரணைக்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

பள்ளியில் சோதனை
மேலும் சிபிசிஐடி அதிகாரி விஜயகுமார் மற்றும் 2 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா ?என சோதனையில் ஈடுபட்டனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நிறைவடைந்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்,

உடல்நலம் பாதிப்பு
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுவில் கூறியுள்ளனர். இதற்கிடையே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் சிவசங்கர் பாபாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
இதனால் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவசங்கர் பாபாவின் லீலைகள் மற்றும் பள்ளியின் செயல்பாடு குறிதது அறிவதற்காக சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் 3 பெண் ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.















Click it and Unblock the Notifications