வசந்த கால நதிகளிலே.. ஜெயச்சந்திரனின் எல்லா பாடலுமே இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றன: இரா.முத்தரசன்
சென்னை: பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். திரை இசை பின்னணி பாடகர்களில் தனித்துவம் பெற்று விளங்கிய ஜெயச்சந்திரன், தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து, இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் முத்தரசன்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன்.. தமிழில் இளைரயாஜா இசையில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் காத்திருந்து, காத்திருந்து உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

முதன்முதலில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் தொடங்கி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி. பிரகாஷ் என அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியவர்.
புற்றுநோய்: சோகம், காதல் உணர்வுகளை தன்னுடைய குரலில் அபாரமாக வெளிப்படுத்தக்கூடியவர். தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த பாடகருக்காக 4 முறை மாநில விருதுகள் ஜெயச்சந்திரனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்றிரவு அவர் காலமானார்.
இதையடுத்து கேரள, தமிழ் சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயச்சந்திரனுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனித்துவம்: இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ் மற்றும் மலையாள திரை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் (80) நேற்று காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. காலனி ஆட்சி காலத்தில் இருந்த கொச்சி சமஸ்தானத்தின் ரவிபுரம் என்ற ஊரில், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் திரை இசை பின்னணி பாடகர்களில் தனித்துவம் பெற்று விளங்கியவர்.
தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து, இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மலையாள திரைப்படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த 1958 ஆம் ஆண்டில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசன் இளைஞர் விழாவில் பங்கேற்று பாடி, பாராட்டுதல்களை பெற்றவர். மேலும், தேசிய அளவில் சிறந்த பாடகர் என்ற விருது பெற்ற ஜெயச்சந்திரன், கேரள அரசின் விருதுகள் ஐந்து முறையும், தமிழ்நாடு அரசிடம் இரண்டு முறை விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்.
பெருமைக்குரியவர்: சேர்ந்திசை மேதை கலைஞர் எம்.பி.சீனிவாசன் குழுவில் இணைந்து செயல்பட்டவர். முன்னணி இசை அமைப்பாளர் அனைவரது இசையிலும் பாடல்கள் பாடிய பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications