கொதித்தெழுந்த காம்ரேடுகள்.. மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல்.. ஏராளமானோர் கைது!
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஐ, சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக.
இதைத்தொடர்ந்து, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடதுசாரி கட்சியினர் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், கிண்டியிலும் இடதுசாரி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர், சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இடதுசாரி கட்சியினர், கொடியேந்தி பேரணியாகச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய இடதுசாரி கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications