சு.வெங்கடேசன் எம்.பி.யை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் பேசியது அரசியல் நாகரீகமற்றது: கே.பாலகிருஷ்ணன்
சென்னை: லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசனை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஒருமையில் பேசியது அரசியல் நாகரீகமற்றது என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அமைச்சர் நேரு சந்தித்தார். அப்போது மதுரை பெரியார் பேருந்து நிலைய விரிவாக்கம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றார்.
நேருவின் ஷாக் பதில்
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் ஆகியவை தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கிண்டலாகவே, சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள் என்று அமைச்சர் நேரு பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
வைரலான நேருவின் பேட்டி
அமைச்சர் நேருவின் இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சீனியர் அமைச்சரான கே.என்.நேரு பொதுவெளியில் இப்படி பேசுவதை திமுக தலைமை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. கடந்த காலங்களிலும் கே.என்.நேரு இதுபோன்ற பேச்சுகளை பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நேரு என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சிபிஎம் கடும் எதிர்ப்பு
அமைச்சர் நேருவின் பேச்சுக்கு மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு தர்ம சங்கடம்
மக்களின் பிரதிநிதியான சு.வெங்கடேசன் எம்.பி., தமிழக நலன் சார்ந்து மத்திய அரசுடன் போராடி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சு.வெங்கடேசன் எம்.பி.யை அமைச்சர் நேரு இப்படி பகிரங்கமாக ஒருமையில் பேசியது திமுகவினரை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.