"எமன் ஏறும் எருமை மாடு.. எங்கு போனாலும் உயிர் பலி.." பிரச்சார வேனை வைத்து விஜய்யை சாடிய ராமலிங்கம்
தூத்துக்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தவெகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் பிரச்சார வாகனம் பார்க்க எமன் ஏறும் எருமை மாடு போல இருப்பதாகவும் அந்த வாகனம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் உயிரிழப்புகள் நடப்பதாகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளுமே பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

மதுக்கூர் ராமலிங்கம்
அப்போது பேசிய அவர், "தவெகவை பார்க்க அரசியல் கட்சி போலவே தெரியவில்லை.. ஆனால், அங்கு நம் வீட்டுப்பிள்ளைகள் எட்டிப் பார்க்கிறார்கள். எனவே, அவர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு நடுவே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை நடிகையுடன் சேர்த்து விமர்சித்துள்ளார். விஜய்யின் அரசியல் பற்றித் தான் பேச வேண்டும்.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசக்கூடாது. எந்தவொரு ஒரு நடிகை குறித்தும் பேசக்கூடாது.
விஜய் பிரச்சாரத்திற்காக வருகிறார் என்றால் அவரை போய் பார்க்கலாம் ஓகே.. அங்குப் போய் வெடி போடுங்கள், விசில் ஊதுங்கள். ஆனால், அவரது பிரச்சார வாகனம் நிற்கிறது. அங்குச் சென்று வெடி போடுகிறார்கள்.. விசில் ஊதுகிறீர்கள். இதெல்லாம் எதற்கு என்றே புரியவில்லை.. அந்த வாகனம் முந்தைய நாள் வந்திருந்தது. அதற்கு இதெல்லாம் செய்தார்கள்.
எமன் ஏறும் எருமை மாடு
அந்த வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அது வந்ததால் குறைந்தது ஒருவரையாவது க்ளோஸ் செய்யாமல் போவதில்லை. மதுரைக்கு வந்தபோது 3 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு திண்டிவனத்தில் இருவர். உச்சக்கட்டமாக கரூரில் 41 பேர்.. நேற்று சேலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பாவம் வட இந்தியாவில் இருந்து பிழைக்க வந்த நபர். பிழைப்பைப் பார்க்காமல் அங்குப் போய் இப்படி ஆகிவிட்டது.
சொந்த கட்சிக்கே கால்ஷீட்
சேலத்தில் பேசிய விஜய், மற்ற தலைவர்கள் எல்லோரும் ஏற்கனவே ஆரம்பித்த கட்சியில் தலைவராக உள்ளனர். என்னைப் போல, தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்குகள் வாங்கும் தில் உங்களுக்கு இருக்கானு கேட்கிறார். அதாவது அவரே ஒரு சதவீதத்திற்கு மேல் தவெக தேறாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. சொல்றதையும் தான் சொல்லுறாரு, கட்சி ஜெயிக்கும் என்று சொல்லலாமே. எனக்குத் தெரிந்து, சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்தான்.
தவெக மீது அட்டாக்
புதுச்சேரி கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாத புஸ்ஸி ஆனந்த் தான் அங்கு பொதுச்செயலாளர். லாட்டரி அதிபரின் மருமகனும் அங்கு தான் இருக்கிறார். லாட்டரிக்கு பதிலாக வேறு ஏதோ முயல்கிறார். கோட்டையைப் பிடிக்கிறேன்... கோட்டையைப் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் செங்கோட்டையனை பிடித்துள்ளனர். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை எல்லாம் வடிவமைத்த அவர் இப்போது புஸ்ஸி ஆனந்த் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார். விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று செங்கோட்டையன் கூறுகிறார். இப்படி ஒரு நாடக கம்பெனியை போல பேசிக் கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications